சென்னை: இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓ.பி.எஸ். அணுக தடை ஏதும் இல்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
இரட்டை இலை சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது என ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எங்களால் இப்போது ஆக்சிஜன் கொடுக்க முடியாது என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அட்லீஸ்ட் மாஸ்க்காவது கொடுங்க என்று ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி; அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதித்தது தொடர்பாக இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து பழனிசாமி பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.