சென்னை: சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு வடபழனி நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஓட்டுனர் சற்று வேகமாக பேருந்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து இடதுபுறமாக பேருந்து திரும்பி, வடபழனி நோக்கி செல்ல முயன்ற போது, வேகத்தின் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதனால், பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
சுவர் பலமாக இருந்ததால், நல்வாய்ப்பாக பேருந்து மேம்பாலத்திலேயே நின்றது. தடுப்பு உடைந்து இருந்தால் மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே கவிழ்ந்து இருக்கும், என பயணிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் பயணிகள் எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினர். அதேநேரம் பக்கவாட்டு சுவரில் பலமாக மோதியால் பேருந்தின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. தகவலறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, சுவரை இடித்து அதன் பிறகு பேருந்தை மீட்டனர்.