புதுடெல்லி: எம்பி பதவியை இழந்த மஹுவா மொய்த்ரா, தனது முன்னாள் காதலனை சட்டவிரோதமாக கண்காணித்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவர் சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பணம் வாங்கிய வழக்கில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரான மஹுவா மொய்த்ரா இழந்தார். இந்நிலையில் மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலனான வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிபிஐ இயக்குநர் பிரவீன் சூத் ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா, மேற்குவங்க காவல்துறை மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து எனது செல்போன் தொடர்புகளை கண்காணித்து வந்துள்ளார். 2019ம் ஆண்டில் இருந்தே கண்காணித்து வந்துள்ளார்.
இதுகுறித்து என்னிடம் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் (26.09.2019 அன்று வாட்ஸ்அப்பில்) மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது சமூக வலைதள பக்கத்தில் கிண்டலாக பதிலளித்த மஹுவா மொய்த்ரா, அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கினார். முன்னதாக அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாக மஹுவா மொய்த்ரா பெற்றதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு முன்பாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் ஆஜராகி, மொய்த்ராவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.