ஹத்ராஸ்: தன்னுடைய மகளை கொலை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து உபி முதல்வர் கலந்து கொண்ட பாஜ மகளிரணி கூட்டத்தில் ஒரு பெண்ணும் அவருடைய மகளும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றம், சட்டபேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி,உபி மாநிலம் ஹத்ராஸ் நகரில் பாஜ மகளிர் அணி சார்பில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘ உபி அரசு பெண்கள் நலன்கள் மற்றும் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்துள்ளது’’என்றார்.அப்போது ஒரு பெண்ணும் அவருடைய மகளும் எழுந்து, தங்களுக்கு நியாயம் வேண்டும் என அழுதபடியே கூச்சலிட்டனர். மஞ்சுதேவி என்ற அந்த பெண்ணின் மகளான பிரீத்தி(30) என்பவர் வரதட்சணை காரணமாக கடந்த 1ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
மகளின் கணவன் வீட்டார் மீது இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தனது மகளை கொலை செய்த கணவன் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சத்தம் போட்டார். இரண்டு பெண்களும் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து புகார் கொடுக்க மேடையை நோக்கி சென்றனர். ஆனால், பெண் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.