கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 934 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இலங்கை முகாமை சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு சில குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சென்று தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதே முகாமைச் சேர்ந்த சித்ரா(46), மகள் அனுசியா (எ) பாக்கியலட்சுமி(22) மற்றும் கணவருடன் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தன்னுடைய மகள் படிப்புக்காக சித்ரா புதுகும்மிடிப்பூண்டி சேர்ந்த ஒரு நபரிடம் ரூ.40 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வாங்கிய பணத்தை குறித்த நேரத்தில் கொடுக்க முடியாமல் சித்ரா தவித்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் புதுகும்மிடிப்பூண்டி சேர்ந்த அந்த நபர் பணம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன தாய் சித்ரா மற்றும் மகள் அனுசியா (எ) பாக்கியலட்சுமி ஆகியோர் அன்று இரவு 11 மணி அளவில் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளனர். இதனை அறிந்த கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் முதல் உதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சிப்காட் போலீசார் கடன் தொல்லை காரணமா அல்லது வேறு ஏதேனுமாக இருக்குமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இலங்கை அகதிகள் முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.