சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 258 அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதனால் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடம் இருந்து உதவிகள் வேண்டி பல்வேறு அழைப்புகள் வருகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 258 அழைப்புகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 23 அழைப்புகள் தீ விபத்து தொடர்பாகவும், மீதமுள்ள 235 அழைப்புகள் மழைக்கால உதவிக்கான அழைப்புகள் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து வந்த அழைப்புகளின் படி உடனுக்குடன் தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுக்கு உதவிகளை செய்தனர். தீ விபத்துக்கான அழைப்புகளில் 2 அழைப்புகள் பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தது. அது, நாமக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடந்தது. மழைக்கால அழைப்புகளின் படி தீயணைப்பு வீரர்கள் தமிழ்நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.