Saturday, June 1, 2024
Home » மோடி அண்ணாச்சி… வாக்குறுதி என்னாச்சி… தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்ட மோடியின் வடை கடை: சூடாக சுட்டு நூதன பிரசாரம்

மோடி அண்ணாச்சி… வாக்குறுதி என்னாச்சி… தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்ட மோடியின் வடை கடை: சூடாக சுட்டு நூதன பிரசாரம்

by Karthik Yash

10 ஆண்டுகளாக பிரதமராக உள்ள மோடிக்கு தமிழ்நாடு என்ற மாநிலம் இருப்பது இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறது. பெயருக்கு தமிழ்நாட்டுக்கு ஏதேனும் திட்டங்களை அறிவித்துவிட்டு அதை செயல்படுத்தாமல் காலம் கடத்தி வந்த மோடி அரசு, நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ‘ஒட்டு முக்கியம் குமாரு’ மொமென்ட்டுக்கு வந்து உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வருவதுபோல் பெயருக்கு ஒரு அரசு நிகழ்ச்சியை வைத்துவிட்டு, தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்க மக்கள் வரி பணத்தில் அடிக்கடி பிரதமர் மோடி வந்து செல்கிறார்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று சொன்னார், கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சொன்னார், கருப்பு பணத்தை மீட்டு வந்து மக்களுக்கு ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்னார், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பேன் என்று சொன்னார், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக ஆக்குவேன் என்று சொன்னார், தமிழக விவசாயிகளின் பாசன நீர் பிரச்னையை தீர்ப்பேன் என்று சொன்னார், ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றுவேன் என்று சொன்னார், மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டு வருவேன் என்று சொன்னார், வெள்ளம் நிவாரணத்துக்கு காசு கொடுப்பேன் என்று சொன்னார், ஊழலை ஒழிப்பேன் என்று சொன்னார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பேன் சொன்னார். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இந்த வாக்குறுதிகளை 10 ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக்கு பதில் பல கோடி பேர் வேலையிழந்து நடுரோட்டில் நிற்பதுதான் மிச்சம். மாறாக 2 தொழிலதிபர்கள்தான் நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி உள்ளனர். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். ஆனா தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கப்பட்ட கருப்பு பணத்தை வெளியிட மோடி அரசு தயங்குகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டியலை வெளியிடாமல் எஸ்பிஐ மூலம் மோடி அரசு முட்டுக்கட்டை போடுகிறது. கருப்பு பணம் மீட்கப்பட்டு யாருடைய வங்கி கணக்குக்கு போடப்பட்டது என்று மோடியால் கூற முடியுமா?. ஒவ்வொருக்கும் ரூ.15 லட்சம் எங்கே?.

குறைந்தபட்ச ஆதார விலை கேட்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போராடும் அவர்களை தீவிரவாதிகளை போல் மோடி அரசு தாக்குகிறது. முதல் கட்ட போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகி உள்ளனர். தற்போது நடந்து வரும் 2ம் கட்ட போராட்டத்தில் இதுவரை 4க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகி உள்ளனர். தமிழக விவசாயிகளின் பாசன நீர் பிரச்னையை தீர்த்து வைக்காமல் அரசியல் செய்கிறது. ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றவில்லை. மாறாக ராமர் கோயிலுக்கு புனித நீர் எடுக்க மட்டும் மோடி ராமேஸ்வரம் வந்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. தப்பு…தப்பு… ‘இது எலக்‌ஷனுக்கான எய்ம்ஸ், மக்களுக்கான எய்ம்ஸ் அல்ல’ 10 ஆண்டுகளாக சும்மா இருந்துட்டு, பல மாநிலங்களில் புதுசு புதுசாக எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்துவிட்டு, இப்போதுதான் தமிழ்நாட்டில் ரகசிய பூமி பூஜை நடத்தி இருக்காங்க. இதுல சென்டிமென்ட் சரியில்லை என்று 2 செங்கல் வைத்து பூஜை பண்ணி இருக்காங்க. வெள்ள நிவாரணத்துக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட மோடி அரசு தரவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை, தூத்துக்குடிக்கு வந்த மோடி இதுபற்றி வாய் கூட திறக்கவில்லை. மக்களை சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. ஆனால் குஜராத், உ.பி என்றால் ஓடோடி செல்கிறார். பணத்தை வாரி வழங்குகிறார். ஊழலை ஒழிப்பேன் என்றார்.

ஆனால், மோடி அரசு ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் செய்து உள்ளதாக சிஏஜி அறிக்கை அம்பலாகி உள்ளது. இதை பற்றி மோடி இதுவரை தன்னிலை விளக்கமளிக்க வில்லை. ஊழல் பற்றி கேட்டாலோ, மோடியின் நெருங்கிய நண்பர்களான அதானி மற்றும் அம்பானி பற்றி கேட்டாலோ தனது மும்மூர்த்திகளை (சிபிஐ, ஐ.டி, ஈ.டி.) விட்டு ரெய்டு நடத்தி மிரட்டி கைது செய்துவிடுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியவர்கள், வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலையை உயர்த்தியதுதான் மோடி அரசின் சாதனை. இதேபோல் காஸ் சிலிண்டர், விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் படும் இன்னல்கள் வார்த்தைகளால் சொல்லி முடியாது. இப்படி ஏதுவுமே செய்யாததால் எந்த மூஞ்சை வைத்து ஓட்டு கேட்பது என தெரியாமல் பாஜ தலையில் துண்டை போட்டு ஊர் ஊராக சுற்றி வருகிறது.

பிரதமர் மோடி போகிற இடமெல்லாம் அவர் என்ன செய்தார் என்று கூறி ஓட்டு கேட்பதில்லை. மாறாக அந்த மாநிலத்தில் உள்ள ஆளும் அரசுகளையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் குறை கூறிதான் ஓட்டு கேட்டு வருகிறார். தமிழ்நாட்டில் ஒரு படி மேலே சென்று அதிமுக தலைவர்களை புகழ்ந்து ஓட்டு கேட்டும் கேவலமான நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார். தற்போது ஓட்டு கேட்டும் தமிழ்நாடு வரும் பிரதமரிடம், ‘மோடி அண்ணாச்சி…வாக்குறுதி என்னாச்சி…’ என்று எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மோடி அரசின் 10 ஆண்டு ஓரவஞ்சனை குறித்து நோட்டீஸ் அடித்து, நடுரோட்டில் ‘மோடியின் வடை கடை’ திறந்து மோடி சுட்டு வடை என கூறி சுட சுட வடை சுட்டு பொதுமக்களுக்கு கொடுத்து நூதன பிரசாரத்தை திமுகவினர் முன்னெடுத்து உள்ளனர். சென்னை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, புதுகை, திருவாரூர், மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் மோடியின் வடை கடையை திறந்து கடந்த 3 நாட்களில் பல லட்சம் வடைகள் சுட்டு மக்களுக்கு வழங்கி உள்ளனர். பல இடங்களில் ஒரு வடை வாங்கினால் 2 வடை இலவசம் என போர்டு வைத்து உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்காமல் நாடுதான் மோடி குடும்பம் என்று கூறி பாஜவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மண்டையில இருக்க கொண்டையை மறந்துட்டீங்களா என்று சொல்வதுபோல், உங்களுடைய குடும்பத்தில் மும்மூர்த்திகள் (சிபிஐ, ஐ.டி, ஈ.டி.) மற்றும் நெருங்கிய நண்பர்கள் அதானி மற்றும் அம்பானியை விட்டு விட்டீர்கள் என்று எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் கலாய்த்து வருகின்றனர். உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவர்களாக உள்ளவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்ததே இல்லை. அதுவும் ஒரு நாட்டை ஆளும் பிரதமர் ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு இதுவரை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பதிலளிக்காமல் அவர்கள் மீது வெறும் ஒருமுனை தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறார். 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திக்க பயந்த ஒரே சக்தி வாய்ந்த தலைவர் என்றால் அது மோடி மட்டுமே என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

* பாஜ கூட்டணியில் இணைந்தது சமக: நெல்லை அல்லது தூத்துக்குடியில் சரத்குமார் போட்டி?
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவா அல்லது பாஜவா என முடிவெடுக்க முடியாமல் கட்சி தலைவர் சரத்குமார் குழப்பத்தில் இருந்தார். இந்நிலையில், பாஜவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடப்போவதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், கடந்த மாதம் 28ம் தேதி என்னை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதால் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ எச்.ராஜா உள்ளிட்டவர்கள் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார். பாஜவுடன் சமக கூட்டணி அமைத்ததை தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் சரத்குமார் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத்குமார் நிற்காவிட்டால் ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

eleven − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi