டெல்லி : தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பாஜக கூட்டணியில் சேரும் விருப்பத்தை தெரிவித்த போது, தாம் அதனை நிராகரித்ததாக பிரதமர் மோடி சாடி உள்ளார். அதனை மறுத்துள்ள பாரதிய ராஷ்ட்ரிய சமிதி மோடி ஒரு அப்பட்டமான பொய்யர் என பதிலடி கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், அனைவர்க்கும் ஒரு ரகசியத்தை கூறப்போவதாக தெரிவித்தார். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் ஆதரவு தேவைப்பட்ட போது, தன்னிடம் இணக்கம் காட்டிய சந்திர சேகர ராவ், பின்னர் அதனை நிறுத்தியதாக மோடி குறிப்பிட்டார். பாஜக கூட்டணியில் சேரும் விருப்பத்தை அவர் தெரிவித்த போது, தாம் அதனை மறுத்ததே அதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
சந்திர சேகர ராவ் தனது மகனை முதலமைச்சராக்க விருப்பம் தெரிவித்த போது, அதற்கும் தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக மோடி குற்றம் சாட்டினார். அதன் பிறகே சந்திர சேகர ராவ் தனது எதிரில் கூட முகம் காண்பிக்கவில்லை என்றும் மோடி தெரிவித்தார். இதனை மறுத்துள்ள சந்திர சேகர ராவ்வின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமராவ், மோடி ஒரு அப்பட்டமான பொய்யர் எனவும் பாஜக கூட்டணியில் சேரும் அளவிற்கு செல்ல எங்களை வெறிநாயா கடித்துவிட்டது எனவும் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பேசிய அவர், “மோடி திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதத் தொடங்கலாம். சிறந்த கதை ஆசிரியராக அவர் வலம் வரலாம்.பிரதமர் கூறும் கதைகளுக்கு அவரது நடிப்பிற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கூட கிடைக்கும். என்டிஏ கூட்டணியில் எங்களை சேர்த்து கொள்ளவில்லை என கூறுகிறார். அதில் சேரும் அளவிற்கு எங்களை வெறிநாய் கடித்துவிட்டதா ?,” என காட்டமாக தெரிவித்தார்.