Monday, May 20, 2024
Home » மோடி ‘ரோடு ஷோ’வுக்கு 113 பேனர், 3 கட்அவுட்; பாஜவினர் மீது போலீஸ் வழக்கு: தேர்தல் அதிகாரி புகாரில் நடவடிக்கை

மோடி ‘ரோடு ஷோ’வுக்கு 113 பேனர், 3 கட்அவுட்; பாஜவினர் மீது போலீஸ் வழக்கு: தேர்தல் அதிகாரி புகாரில் நடவடிக்கை

by MuthuKumar

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 113 பேனர்கள் மற்றும் 3 கட்அவுட்கள் வைத்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின்படி, மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பாஜவினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் போட்டியிடும் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9ம் தேதி தி.நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோ நடத்தினார். இந்த ரோடு ஷோவுக்கு சென்னை மாநகர காவல்துறை 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. மேலும், பிரதமரின் ரோடு ஷோவுக்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

ஆனால் ரோடு ஷோ ஏற்பாடு செய்த பாஜ நிர்வாகிகள் போலீசார் அளித்த 20 நிபந்தனைகளை மீறியும், முன் அனுமதி பெறாமல் பிரதமர் மோடியை வரவேற்க சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக கட்அவுட்கள் வைக்கப்பட்டது. உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உத்தரவுப்படி தடையை மீறி வைக்கப்பட்ட 113 பேனர்கள் மற்றும் 3 கட் அவுட்கள் உடனடியாக அகற்றப்பட்டன. அப்போது பேனர் அகற்றிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து பாஜவினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதைதொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியான சென்னை மாநகராட்சி இளநிலை பொறிளாளர் பூபதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள், கட்அவுட்கள் வைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பாஜ நிர்வாகிகள் மீது பாண்டி பஜார் மற்றும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் தேர்தல் விதிகளை மீறியதாக ரோடு ஷோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பெயர் குறிப்பிடாத பாஜ நிர்வாகிகள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் கலந்துகொண்ட ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

eight + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi