கோவை: கோவையில் அண்ணாமலையை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று கோவையில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசினார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிகள் அறிவிக்கப்பட்டு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும், பாஜ வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலையும் களம் காண்கின்றனர். இதற்காக அண்ணாமலை கோவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கோவையில் தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கோவையை பொறுத்தவரை இங்கு அண்ணாமலையை வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துவதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார். கருத்தரங்கில் த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.