பெரம்பூர்: குஜராத்தில் உள்ள விமான நிலையம், துறைமுகங்களை அதானிக்கு கொடுத்துவிட்டார் மோடி என கொடுங்கையூரில் நடந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ எழிலரசன் கூறியுள்ளார். சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் வடக்கு பகுதி 34வது வட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் விழா, திராவிட மாடல் அரசின் சாதனை நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 34வது வட்ட செயலாளர் கே.வி.ராஜன் தலைமையில் கொடுங்கையூர் காந்தி சிலை அருகில் நேற்று நடந்தது.
பெரம்பூர் வடக்கு பகுதி செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, பெரம்பூர் தொகுதி பார்வையாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் பேசியதாவது:இந்திய பிரதமருக்கு தமிழ்நாடு, தமிழ் மொழி மீது அக்கறை கிடையாது. பல நேரங்களில் அதை நிரூபித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் உலகத்தில் எங்கு பதுக்கி வைத்திருந்தாலும் கருப்பு பணத்தை மீட்டு ஒருவருக்கு 15 லட்ச ரூபாய் தருவேன் என சொன்ன மோடி இதுவரை தரவில்லை. அதற்கு பதிலாக வீட்டில் சேர்த்து வைத்த 500, 1000 ரூபாயை செல்லாத பணமாக மாற்றினார்.
சின்ன முதலீட்டில் தொடங்கி இன்று உலக அளவில் பெரிய பணக்காரராக அதானி இருக்கிறார். இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார், அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியாது. குஜராத்தில் உள்ள விமான நிலையம், துறைமுகங்களை அதானிக்கு கொடுத்துவிட்டார். இந்தியாவில் அதிகளவில் பல லட்சம் கோடி போதை பொருள் குஜராத்துக்கு வருகிறது. அதானி கன்ட்ரோலில் உள்ள துறைமுகம், விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வந்து கைப்பற்றப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்த வழக்குகளும் இல்லை. வழக்குகள் போட்டாலும் யார் மீதும் தண்டனை இல்லை. நாடு முழுவதும் போதைப் பொருட்களை விற்கக்கூடிய உத்தமமான வேலையை பாஜ தொண்டர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மோடி மூலமாக அதானி உலகம் முழுவதும் பயணிக்கிறார். இந்தியாவுக்குள் வருகிற போதை பொருள் எல்லா மாநிலத்திற்கும் பாஜக மூலமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த வேலையை மட்டுமே பாஜக செய்து வருகிறது.