தேர்தல் நெருங்கி வருதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளார். அந்த வகையில் அவர் கடந்த மாதம் 27, 28 ஆகிய 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லையில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அடுத்த 5 நாட்களுக்குள் மீண்டும் கடந்த 4ம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். அன்றைய தினம் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாட் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று மாலை சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் மீண்டும் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 22ம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருவார் என்று கூறப்படுகிறது. கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளை மையமாக வைத்து கோவையில் பாஜ பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார். இந்த மேடையில் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடும் வேலூர், பாரிவேந்தர் போட்டியிடும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் பிரதமர் மோடியை பிரசாரத்துக்கு அழைத்துள்ளனர். எனவே முதல் கட்ட பிரசாரத்தில் அவர் கோவையில் மட்டும் பேசுகிறார். அதன் பிறகு மீண்டும் சில நாட்களில் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு மோடி வர உள்ளதாகவும், அப்போது வேலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணத் திட்டம் அமையும் என்றும் பாஜ தரப்பில் ெதரிவிக்கப்பட்டுள்ளது.