சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: யாருக்கு நன்கொடை கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் தேர்தல் பத்திரம் பெறுவது தவறானது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஸ்டேட் பேங் காலஅவகாசம் கேட்டது வேடிக்கையாக உள்ளது, கண்டிக்கத்தக்கது. எய்ம்ஸ் விவகாரத்தில் மீண்டும் பூமி பூஜை செய்துள்ளனர்.
மற்றபடி அவர்கள் பணிகளை தொடங்கவில்லை, இது அரசு சார்பில் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். இது போட்டோ ஷூட்டிற்காக நடைபெற்று உள்ளது. வருகின்ற தேர்தலை எதிர்கொள்ள எனது தந்தையின் தயவு இன்னும் எனக்கு தேவைப்படுகிறது. அதே வேலையில் கட்சி பலம், கூட்டணி பலம் தான் முக்கியம். எம்பி, எம்எல்ஏக்கள் பெயர்கள் 90 சதவீத மக்களுக்கு தெரியாது. கட்சியின் சின்னம் தான் மக்களுக்கு தெரியும். எனவே கட்சி பலத்தையும், கூட்டணி பலத்தையும் நம்பி தேர்தலை எதிர் கொள்வேன்.
விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான ஒன்றிய அரசு ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான் எங்களது முக்கிய தேர்தல் பரப்புரையாக இருக்கும். ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு நிதி கொடுக்காமல் வஞ்சித்தது உள்ளிட்டவைகள் முக்கியமானவக இடம்பெறும்.
மன்னார்குடியிலிருந்து செட்டிநாடு பகுதியான சிவகங்கைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியிட வந்தால் செட்டிநாடு வழக்கப்படி அவருக்கு நல்ல விருந்து வைத்து பத்திரமாக வழியனுப்பி வைப்போம். அவர் நண்பர். மூன்று வார காலத்திற்குள் மீண்டும் அவரை மன்னார்குடிக்கே அனுப்புவோம். அதிமுகவுடன் நிறைய லெட்டர் பேட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.