சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி (திமுக) பேசுகையில், ‘‘பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருமழிசையில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பூந்தமல்லிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா என்றார்.
இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 240 எம்எல்டி தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது. இந்த அளவை உயர்த்த நாம் கடந்த 7 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். அதில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதி பெற காலதாமதம் ஆகிறது. மெட்ரோ ரயில் செல்வதுபோல் ராட்சத குழாய்கள் சாலைக்கு கீழே பதிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது. ஆனாலும் அதற்கும் ஓர் ஆண்டு ஆகும். தற்போது அந்த குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்தபின் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பூந்தமல்லி திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.