சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் (திமுக) பேசுகையில், கலசபாக்கம் தொகுதி, மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன் வருமா? என்றார்.
அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுகையில், “இந்த திட்டம் தொடர்பாக ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த, ஒப்புதல் மற்றும் உரிய அனுமதி கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
மேலும் கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன்(அதிமுக)பேசுகையில், “அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்பது 60 ஆண்டு கால விவசாயிகளின் கனவு திட்டமாக உள்ளது. 99% பணி நிறைவடைந்தது என அரசு தெரிவித்து வருகிறது. எப்பொழுது இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றி பயன்பாட்டிற்கு வரும்” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,‘‘அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக முடிவடைந்து விட்டது. இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு காலிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீர் சம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தற்போது காளிங்கராயன் அணையில் தண்ணீர் இல்லை. போதுமான அளவு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைப்பார்” என்றார்.