அரியலூர்: அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அருகே வேளாண்மைத்துறை உதவி பொறியாளர் மகாநதி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஜெயங்கொண்டத்தில் இன்று மாலை சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த பறக்கும்படையினர் அமைச்சரின் காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் பறக்கும் படையினரிடம், உங்களது கடமையை செய்யுங்கள் என்று சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். காரில் அவரது உடைகள், குடிப்பதற்கு சில தண்ணீர் பாட்டில்கள் தவிர வேறு எதுவும் இல்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.