சென்னை: மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) : அன்பு இருந்தால் தான் பிறருக்கு உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி, அதன்படி வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி, எங்கும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம்.
திருநாவுகரசர் (காங்கிரஸ் எம்.பி.) : நபிகள் நாயகம் பிறந்த நாளில் மத நல்லிணக்கம் தழைத்தோங்கி, மனித குலம் ஒற்றுமையாக வாழவும் வளம் பெறவும் பிரார்த்திப்போம்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) : இறைவனை வணங்கி மகிழ்வோம். பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம். எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்வோம் என சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் நபிகள் வற்புறுத்தி அறிவுறுத்தினார்.
ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்) : அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க வேண்டும் என்று நபிகள் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): இறைத்தூதர் முகமது நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை அனைவராலும் மிலாதுநபி பண்டிகையாக கொண்டாப்படுகிறது. இந்நன்னாளில் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறைய வாழ்த்துகள்.
விசிக தலைவர் திருமாவளவன்:
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபி தினத்தில் இஸ்லாமியப் மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான தலைமைத்துவ ஆற்றல் வாய்ந்த மகானின் பிறந்தநாளான ‘மீலாது நாளை’ ‘உலக சகோதரத்துவ நாளாக’ கடைபிடிப்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மீலாதுநபி தின வாழ்த்துகள்.