சென்னை: சென்னை விம்கோநகர் பகுதியில் குப்பைகளை எடுத்து திரிந்து கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியை குழந்தை கடத்துபவர் என நினைத்து பொதுமக்கள் ஒன்று கூடி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக வாட்ஸ் அப் வழியே ’குழந்தை கடத்தும் நபர்கள் உங்கள் பகுதியில் இருக்கிறார்கள் எச்சரிக்கையாக இருக்கவும்’ என ஒரு ஆடியோ செய்தி பரவி வந்தது.
இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருவதாகவும். இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று காவல் துறை பொதுமக்களிடம் விளக்கம் அளித்தது.
மேலும் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தது. அந்த வகையில் விம்கோநகர் பகுதியில் குப்பைகளை எடுத்து திரிந்து கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளியை குழந்தை கடத்துபவர் என நினைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.