சென்னை : தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.6,000 வெள்ள நிவாரணத் தொகை சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வசிக்கும் 25 முதல் 30 லட்சம் குடும்பங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கு நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகைக்கான டோக்கன் வரும் 16ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் புயல், வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த விரிவான தகவல்களுடன் இன்று அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 25 முதல் 30 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை பெறும் பயனாளிகளிள் பெரும் பகுதியினர் சென்னையில் உள்ளனர். இங்கு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 17 லட்சம் முதல் 18 லட்சம் வரை உள்ளது. புதிதாக குடும்ப அட்டைக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் கூட தகுதியானவர்கள் இருந்தால் அவர்களுக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் என்றும் புயலால் பாதிக்கப்படாத தாலுகாக்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.