மேட்டுப்பாளையம்: சமயபுரம் அருகே அமைக்கபட்ட மின்வேலியால் வழித்தடம் மறைக்கப்பட்டதால் பாகுபலி யானை திகைத்து நின்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, பாலப்பட்டி, சிறுமுகை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. பகல் நேரங்களில் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்குள் செல்லும் இந்த யானை, இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் பாகுபலி யானை பல நாட்களாக மேட்டுப்பாளையம் அடுத்த சமயபுரம் வழியாக ஜக்கனாரி வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இந்நிலையில் சமயபுரம் பகுதியில் யானை வழித்தடத்தில் தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தின் உரிமையாளர் அங்கு மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்- வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையை கடந்து பாகுபலி யானை செல்ல முயன்றது. அப்போது, நீண்ட நேரமாக போக்கிடம் தெரியாமல் நடுரோட்டில் திகைத்து நின்றது.
தொடர்ந்து தனது வழித்தடம் வழியாக செல்ல முயன்ற போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியால் செய்வதறியாது திகைத்து நின்ற யானை சற்று நேரம் அங்கு உலாவி விட்டு பின்னர் மீண்டும் பிரதான சாலைக்கு வந்து சாலை வழியாக கம்பீரமாக நடந்து சென்றது. அப்போது யானையை பார்த்து குரைத்தபடி துரத்தி சென்ற நாயை தனது காலால் யானை எட்டி உதைத்து விட்டு மீண்டும் சாலையில் நடந்து சென்று மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் சென்றது.