சென்னை: மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19ம்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். பங்காரு அடிகளாரின் நினைவிடம், கோயில் கருவறை அருகே பங்காரு அம்மா குரு மண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பங்காரு அடிகளார் நினைவிடத்துக்கு சென்று கோயில் வளாகத்தில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர் மறைந்த பங்காரு அடிகளார் இல்லத்துக்கு சென்று லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அதிமுக கட்சி மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தன், கார்த்திகேயன் மற்றும் ஆன்மீக இயக்க துணை தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.