மேலூர்: மேலூர் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு நிதி, ஒன்றிய அரசு நிதி ஆகியவற்றின் உதவியுடன் பல்வேறு புதிய கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய அரசு நிதி ரூ.32 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் 150 படுக்கைகள் கொண்ட கட்டிட பணிகளை மதுரை எம்.பி வெங்கடேசன் நேற்று ஆய்வு செய்தார். இந்த கட்டிட பணிகள் முடிவடைந்த பின்பு, பல்வேறு நவீன சிகிச்சைகளும் அதற்கான சிறப்பு கருவிகளும் இங்கு அமைக்கப்பட்ட உள்ளது.
ஆய்வு குறித்து எம்.பி வெங்கடேசன் கூறும்போது, ‘‘மேலூர் – கொட்டாம்பட்டி நான்குவழிச் சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் நடந்து, இறப்பு சதவிகிதம் அதிகரித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் மதுரை தலைமை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இக்கட்டிட பணிகள் முடிவுற்று, அனைத்து வசதிகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட துவங்கும் போது, மதுரை செல்வது தவிர்க்கப்பட்டு, இங்கேயே அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கும்’’ என்றார்.இந்த ஆய்வின் போது மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், மேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயந்தி உட்பட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.