ஷில்லாங் : மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்கமா தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள காரோ ஹில்ஸை தளமாக கொண்ட துரா நகரத்தை மேகாலயா மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றுகடந்த 13 நாட்களாக ஆச்சிக் அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இப்போராட்டத்துக்கு பாஜக ஆதரவு அளித்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக துராவில் உள்ள முதல்வர் கான்ட்ராட் சங்கமா முகாம் அலுவலகத்தில் ஆச்சிக் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என மேகாலயா அரசு அறிவித்தது. அதன்படி நேற்றிரவு ஆச்சிக் அமைப்பினருடன் முதல்வர் சங்கமா பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே ஆச்சிக் அமைப்பு ஆதரவாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கூடி இருந்தனர்.
திடீரென முதல்வர் சங்கமா அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இத்தாக்குதலில் முதல்வர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசார் படுகாயமடைந்தனர். கற்கள் தொடர்ந்து வீசப்பட்டதால்,பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆச்சிக் தலைவர்கள் சிதறி ஓடினர். முதல்வர் காயமின்றி தப்பினார். போராட்டக்காரர்கள் முதல்வர் செல்லும் சாலையை மறித்ததால் சுமார் 1 மணிநேரம் முதல்வர் கான்ட்ராட் சங்மா அலுவலகத்துக்குள்ளே முடங்கி இருந்தார். ‘நிலைமை கட்டுக்குள் உள்ளது, ஆனால் பதட்டமாக உள்ளது’ என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் துராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து ஆச்சிக் தலைவர்கள் கூறுகையில், ‘முதல்வர் அலுவலகம் தாக்கப்பட்டது மிகுந்த கவலையைத் தருகிறது. நாங்கள் அமைதி வழியில்தான் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்வர் இல்லம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி முழக்கமிட்டது சமூக விரோத கும்பல்தான்’ என்றனர்.