ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் நடைபெற்ற எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக் குழு தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாளந்தூர் ஊராட்சியில் தொண்டர் குளம் சீரமைக்க ரூ.1 லட்சமும், மாகரல் ஊராட்சியில் பவானி அம்மன் கோயில் குளம் கரையை பலப்படுத்துதல் பணி செய்ய ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு செய்வது எனவும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருவிழா 14 வாரங்கள் நடக்கிறது. இதற்காக வடமதுரை, ராள்ளப்பாடி, அரியப்பாக்கம் பகுதியில் கழிவறைகள் அமைத்தல், ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், ராள்ளப்பாடி, வடமதுரை, பகுதியில் பந்தல் அமைத்தல் மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறைக்கு பந்தல் அமைத்தல், 1000 லிட்டர் குடிநீர் தொட்டி வழங்கல் மற்றும் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு என ரூ.11 லட்சத்து 87 ஆயிரம் நிதி ஒதுக்குதல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.