Sunday, September 1, 2024
Home » சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன்: சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன்: சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு

by Ranjith

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தம் உலகளவில் மூன்றில் ஒருவரை பாதிக்கிறது மற்றும் ஐந்தில் நான்கு உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தங்கள் ரத்த அழுத்தத்தை போதுமான அளவு கட்டுப்படுப்படுத்துவதில்லை. இது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களுக்கான முக்கிய காரணமாக அமைகிறது.

இது 10.8மில்லியன் தவிர்க்கக்கூடிய இறப்புகளுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு வருடமும் உயர் இரத்த அழுத்தத்தின் பாதிப்பு உலகளவில் 31 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவில் 28 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் கண்களில் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உலக ரத்த அழுத்தம் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விற்பனையகங்களை திறந்து வைத்தார். நோயாளிகள் வீட்டிலேயே தங்களது இரத்த அழுத்தத்தை அளவீடு செய்ய ரத்த அழுத்த உபகரணங்களை வழங்கினார். ஆபத்து நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த சிறு கையேட்டை வெளியிட்டு சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:

17 முதல் 30 சதவீதம் உயர் ரத்த அழுத்ததிற்கு அதிகப்படியான உப்பு உட்கொள்வதே காரணம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. உணவில் உப்பை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். மாம்பழம், சிட்ரஸ் பழங்கள், தர்பூசணி, மாதுளை, பிளம்ஸ், கொடிமுந்திரி அவகேடோ ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் யோகா, தியானம், உடற்பயிற்சிகள், மன அழுத்த மேலாண்மை சீரான நடைபயிற்சி ஆகியவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

இதுபோன்ற வாழ்வியல் முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி வகுக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுகத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் முலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் 6,100க்கும் மேற்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று ரத்த அழுத்தம் மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறது, என்றார்.

வடசென்னையில் வாழும் ஏழை மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அமைந்த அரசின் விரிவான முழு உடல் பரிசோதனைத் திட்டதின் வெற்றிகரமான இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததற்காகவும், இத்திட்டத்தின் மூலம் 430க்கும் மேற்பட்ட புதிய உயர் ரத்த அழுத்த நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்த மருத்துவர்களைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குநர் சங்கு மணி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twelve + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi