மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவில் ஓடும் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் தங்களுக்கு போதிய எரிவாயு நிரப்பும் மையங்கள் இல்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மயிலாடுதுறையில் சுற்றுசூழல் மாசை கட்டுப்படுத்தும் விதமாக இயற்கை எரிவாயுவில் ஓடும் ஆட்டோக்களை தனியார் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 700 இயற்கை எரிவாயு ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதானி குழுமம் மயிலாடுதுறையில் 8 இடங்களில் எரிவாயு நிரப்பும் நிலையங்களை அமைக்கும் என்று அந்நிறுவனம் ஓட்டுனர்களுக்கு உறுதியளித்திருந்தது. ஆனால் வெறும் 2 இடங்களில் மட்டுமே அதானி குழும இயற்கை எரிவாயு நிரப்பும் மையங்கள் இருப்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். லட்சுமிபுரம், சேத்ரபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எரிவாயு நிலையங்களில் 700 ஆட்டோக்கள் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கூடுதலாக இயற்கை எரிவாயு நிரப்பும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் மனு அளித்துள்ளனர். ஒரு ஆட்டோவிற்கு ஏழரை கிலோ எரிவாயு நிரப்ப வேண்டிய இடத்தில் 5அரை கிலோ மட்டுமே நிரப்பப்படுகிறது. என்பது ஆட்டோ ஓட்டுனர்களின் புகாராகும். இதனால் வெறும் 30 கிலோ மீட்டர் மட்டுமே தங்களால் ஓட்ட முடிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து அதானி குழுமத்தை தொடர்பு கொண்ட அதிகாரிகள் விரைந்து இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்கவிட்டால் வேறு நிறுவனத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.