Friday, May 24, 2024
Home » பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

by Lavanya

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், மத்திய தொழிலக பாதுகாப்பின் கீழ் சென்னை உயர் நீதிமன்றம் வருவதால் எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பு நடைமுறையை காரணமாக கூற முடியாது எனவும் வாதிட்டார். அப்போது, சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இன்னும் தொடங்கவில்லை என விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், டிசம்பர்.8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

You may also like

Leave a Comment

seventeen − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi