கலசபாக்கம், மே 24: சித்தர்கள் காட்சி தரும் 4560 அடி உயர பர்வத மலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தைரியமாக மலையேற சக்தி கயிறு கட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. சித்தர்கள் இன்றும் காட்சி தரும் நந்தி வடிவமான பர்வத மலைக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ தினங்களில் அதிக அளவு பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது தினமும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் வைகாசி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 7.16 மணிக்கு தொடங்கி நேற்றுமுன்தினம் 7.51 மணிக்கு முடிவடைந்தது. இதையொட்டி பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகார்ஜுனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தால் இறைவனின் முழு கருணையும் அருட் சுவாசமும் கிடைக்கும். வியாழன் மிகுந்த சந்தோஷம் என்பது ஐதீகம். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களாக அதிக அளவில் இருந்தது. விடிய விடிய பக்தர்கள் பர்வதமலை ஏறி சென்று பூஜை செய்து வழிபட்டனர்.
மலையேறும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பதை வனத்துறை காவல்துறை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மலை அடிவாரத்தில் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர். மலைக்கு செல்வதற்காக பாறைகள் படிக்கட்டுகள் செங்குத்தான கடப்பாரை படி ஏணி படி ஆகாய படி உள்ளிட்ட படிகளை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வதால் பக்தர்களுக்கு தைரியம் ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கிட பக்தர்களின் கைகளில் வீரபத்திரன் கோயிலில் சக்தி கயிறு கட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் வைகாசி மாத பவுர்ணமியொட்டி பிரம்மராம்பிகை அம்பாள் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலையேறி செல்லும் பக்தர்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட சக்தி கயிறு கட்டப்பட்டது.