சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவியியல் ஆய்வு மூலம் எண்ணெய் படுகைகளை கண்டறிவதும், அதிலிருந்து இயற்கை எரிவாயுவை பிரித்தெடுப்பதற்குமான செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான தலைமையகம் சென்னையில் இயங்கி வருகிறது. இதற்கு முன்னரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த அலுவலகத்தை பிரித்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, ஜனநாயக இயக்கங்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் ராஜமுந்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இதை தமிழ்நாட்டு மக்களும், அரசாங்கமும், ஊழியர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஒன்றிய அரசின் எண்ணெய் வள அமைச்சகம் உடனடியாக தலையிட்டு ஓ.என்.ஜி.சி.யின் கார்ப்பரேட் தலைமையகம் எடுத்திருக்கக் கூடிய இந்த தவறான முயற்சியை கைவிடச் செய்ய வேண்டும்.