சென்னை: திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கு காவல்நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நேரம் என்பதால் திருமணம் உள்ளிட்ட பலநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தேர்தல் காலம் என்பதால் திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப, சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடைப்பதில் பெரும் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது என பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் வருகின்றன. இதனால் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு செய்ய வேண்டிய பணிகளும் பாதிப்புக்கு ஆளாகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.
தேர்தலுக்கான சுவிதா செயலியில் இதற்கான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆகவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.