Sunday, May 19, 2024
Home » திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள், தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள், தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

by Porselvi
Published: Last Updated on

டெல்லி : திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாகச் அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பில், “திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்டத் திருத்தங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும்.

திருமண முறையில் சட்டப்படியே பல்வேறு மாற்றங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல.பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது. அதே நேரம் நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது. நாடாளுமன்றமே சட்டங்களை இயற்ற முடியும்.சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றமே முடிவு எடுக்கும்.

ஒரு நபரின் பாலினம் அவரின் பாலின ஈர்ப்புடன் தொடர்புடையதல்ல. ஒரு திருநங்கையின் திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரால் ஒரு பாலின உறவில் இருக்க முடியும் என்பதால் அத்தகைய திருமணங்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.தன்பாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது, மாற்றுப்பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள், நன்மைகள் மற்றும் சேவைகள், ‘QUEER’ ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.ஒருவர் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பது அவரது உரிமை. அவர் தேர்ந்தெடுத்த இணையை அங்கீகரிக்க வேண்டும், தன்பாலினத்தவர்கள் எந்த வகையிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

திருமணமாகாத ஜோடிகள், தங்கள் உறவின் மீது அதிக ஈடுபாட்டில் இல்லை என்று கருத முடியாது.திருமணமான தன்பாலின தம்பதிகள் மட்டுமே குழந்தைக்குப் பக்கபலமாகவும், ஆதரவாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.தன்பாலின தம்பதிகள் மட்டுமே ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டத்தால் கருத முடியாது. இது ‘QUEER’ ஜோடிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமையும்.

பிற குடிமக்களைப் போலவே தன்பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது.அதன்படி அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது..திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் அவர்களுக்கான இந்த உரிமையை மறுக்க முடியாது.தன் பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை வழங்குவது உள்ளிட்ட அரசின் சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும்.பல ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம், எனவே தன்பாலின திருமணத்துக்கும், இணைவதற்கும் உரிய உரிமையை வழங்க வேண்டும்,”என்றார்.இறுதியாக தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றும் சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eight − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi