Thursday, May 9, 2024
Home » திண்டுக்கல்லில் அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு திருமணம்

திண்டுக்கல்லில் அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு திருமணம்

by Lakshmipathi

*அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்த்தினார்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ள காளகத்தீஸ்வரர் கோயிலில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 8 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, ரூ.4.37 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கினார்.தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் ஏழை மணமக்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைப்பதுடன் சீர்வரிசைகளும் வழங்கப்படுகிறது. இதன்படி திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயிலில் 8 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு ரூ.4.37 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோரின் ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்குத் திருக்கோயில்கள் சார்பாக திருமண விழா நடத்தப்படுகிறது.அதன்படி, இந்துக்களின் திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம் வழங்கப்படுகிறது. இதுதவிர மணமக்களுக்கான ஆடைகள், உணவு மாலை, பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் ஏற்கனவே 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, தற்போது 8 ேஜாடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரணியம், அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ்,மாநகர பொருளாளர் சரவணன், துணை செயலாளர் அழகர்சாமி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கதிரேசன், மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார்,மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் மாரியம்மாள், அருள்வாணி, ஸ்டெல்லா மேரி, கிருபாகரன், பகுதி செயலாளர் பஜ்லுல் ஹக், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi