இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜ அரசுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, தனது சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதேபோல், நேற்று காலை இறுதி கட்ட பிரசாரம் செய்ய குடியாத்தம் நகருக்கு வந்தார். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.