தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் ஆரணி நடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளர் அ.கணேஷ்குமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை வந்தவாசி நகரில் மேற்கொண்டார். இதையொட்டி 5 கண் பாலத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக தேரடி, காந்திசாலை, பொட்டிநாயுடு தெரு, ஆரணிசாலை வழியாக பழைய பஸ் நிலையம் செல்ல முற்பட்டார்.
அதற்கு முன்பாக 2வது வார்டு கோட்டை பகுதியில் செல்ல முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் உள்ளே வாக்குகள் கேட்டு வர எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரையும் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து 3வது வார்டு பகுதியில் செல்ல முயன்றனர். அங்கேயும் பொதுமக்கள் வாக்கு சேகரிக்க எதிர்ப்பு தெரிவித்து, பாஜ கொடியுடன் உள்ளே வரக்கூடாது என வேட்பாளரிடம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் வாக்கு சேகரிக்க முடியாமல் வேட்பாளர் கணேஷ்குமார் திரும்பிச்சென்றார். இதனை தொடர்ந்து பழைய பஸ் நிலையம், கோட்டை மூலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பிரசாரத்தை முடித்துக்கொண்டார். இதனால் நேற்று அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.