திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பரிமளா (42). இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் பணிக்கு வந்தார்.
நாளை நடக்க உள்ள மக்களவை தேர்தல் தொடர்பான பணிக்காக திருப்பத்தூருக்கு சென்று விட்டு கணவருடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோ இவர்கள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த பரிமளா மீது கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த ஒரு லாரி ஏறியது. இதில் உடல் நசுங்கி பரிமளா உயிரிழந்தார்.