மஞ்சூர் : மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை ஆனந்தி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் யோகேஸ்வரி,துணை தலைவர் கமலா,சுய உதவிகுழு உறுப்பினர்கள் தீபா, ப்ரீத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, கிரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முன்னதாக பள்ளிக்கு நிலம் வழங்கிய பெள்ளாகவுடர் உருவப்படத்தை பலராமன் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்து தலைமையாசிரியை ஆனந்தி பேசுகையில்: தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி, விளையாட்டு, தனி திறன் ஊக்குவிப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது.
மாணவர்கள் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் வழங்குகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவிகள் மத்தியில் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியை எலிசபெத்மேரி மற்றும் ஆசிரியை சவிதா, பாபி, ராஜ்மோகன், ஆக்சிலியா, கவிதா, சர்மிளா, ஓவிய ஆசிரியர் சகாயதாஸ் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.