சென்னை : குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, சரியான சூழல் மணிப்பூரில் நிலவுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், “மணிப்பூரில் அரசியலமைப்பு இயந்திரம் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது; குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, சரியான சூழல் மணிப்பூரில் நிலவுகிறது”, எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை தொடர்பான அறிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் தொடர்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.