டெல்லி: பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் திருமாவளவன் எம்.பி. பேசினார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் மக்கள், மாநில அரசின் மீதும் ஒன்றிய அரசின் மீதும் நம்பிக்கையை இழந்து நிற்கிறார்கள். மணிப்பூர் அரசிடம் இருந்த ஆயுதங்கள் மெய்தி மக்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசே கூறுகிறது.
மணிப்பூரில் இன்னும் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. சொந்த மண்ணில் அகதிகளாக நிற்கும் நிலை மணிப்பூர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் ரயிலில் காவலர் ஒருவர், இஸ்லாமியர்களை தேடித் தேடிச் சென்று சுட்டுக் கொன்றுள்ளார். இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்ற காவலர், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.
தலித், பழங்குடியின மக்கள் விரோத பாஜக அரசு:
சமையல் எரிவாயு விலை, தக்காளி விலை உயர்வால் பாதிக்கப்படுவோர் சாமானிய பெரும்பான்மை இந்து மக்கள்தான் என்று திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள்தான் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸை ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. மக்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்படவில்லை.
இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களையும் ஒன்றிய பாஜக அரசு நிரப்பவில்லை. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி விலக வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி பேசினார்.