இம்பால் : மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே மீண்டும் வெடித்த மோதலில் ஆளுங்கட்சி அமைச்சரின் வீட்டிற்கு வன்முறையாளர்கள் தீ வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க பூர்வீக பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மே மாதம் 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்தனர். பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தும் மோதலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதனிடையே இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் காங்போகி மாவட்ட எல்லையில் உள்ள காமென்லோக் பகுதியில் வன்முறை வெடித்தது. ராணுவ சீருடையில் வந்த சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு இம்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இம்பால் மேற்கு மாவட்டத்தின் லாம்பெல் பகுதியில் உள்ள குக்கி இனத்தை சேர்ந்த தொழில்துறை அமைச்சர் நேம்சா கிப்ஜெனின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். நல்ல வேலையாக அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மணிப்பூரில் ஏற்கனவே பல ஆளும் பாஜக அமைச்சர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர் மணிப்பூர் மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சர்.கடந்த மே 3ம் தேதி தொடங்கிய வன்முறையில் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.