இம்பால் : மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்த்தி என்ற சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து முடிவு எடுக்குமாறு மணிப்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் மெய்த்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் ஆக மாறி, கலவரமாக வெடித்தது.
மெய்த்தி சமூகத்தவர் மற்றும் வேறு சில பழங்குடியினரின் வீடுகள், தேவாலயங்கள் தீக்கரை ஆக்கப்பட்டன. மோரே நகரில் பதற்றம் நிலவுவதால் அங்கு தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. . இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வன்முறையில் ஈடுபட்ட குக்கி இனத்தவர் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.இதையடுத்து மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்பாமல் இருக்க இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.