ஜார்க்கண்ட்: மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்குக் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்கள் இடையே நிலவி வரும் கடும் மோதலே மணிப்பூர் பற்றி எரியக் காரணமாக இருக்கிறது.
அங்குப் பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கிய கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.