சென்னை:12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதியோர் உதவித்தொகை திட்டம் வாயிலாக இப்போது வழங்கக்கூடிய ஓய்வூதியங்கள் ரூ.1000த்தில் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் தற்போது 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியங்களை பெற்று வருகிறார்கள். இதுதவிர, ஓய்வூதியம் கேட்டு 74 லட்சத்து 73 பேர் விண்ணப்பம் கொடுத்து காத்திருக்கிறார்கள்.
அவர்களில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படும்.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவித்தொகைகளை உயர்த்தி வழங்குகிறது தமிழ்நாடு அரசு! மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான #திராவிட_மாடல் அரசுக்கு நன்றி !முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து இனி *ரூ.1200* ஆக உயர்த்தி வழங்கப்படும் சொல்லாததையும் செய்யும் ஆற்றல்மிகு அன்புத் தலைவர் நம் #முதலமைச்சர் #திராவிட_நாயகன் என்று பதிவிட்டுள்ளார்.