சென்னை: சூளைமேடு கில் நகர் பகுதியை சேர்ந்த சத்யா சொரூபன் (25), கடந்த 2017 அக்டோபர் 18ம் தேதி கேந்திரிய வித்யாலயா அருகே ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது, சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதை சத்யா சொரூபன் கண்டித்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த சூளைமேட்டை ேசர்ந்த சஞ்சய் (20), கோடம்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (40), சூளைமேட்டை சேர்ந்த அப்புராஜ் (30), ரூபேஷ் (19) ஆகியோர் சத்யா சொரூபனிடம் தகராறு செய்துள்ளனர்.
இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர்கள், சத்யா சொரூபனை கத்தியால் சஞ்சய் வெட்டியுள்ளார். புகாரின் பேரில் சஞ்சய், ரமேஷ், அப்புராஜ், ரூபேஷ் ஆகியோரை கைது செய்த சூளைமேடு போலீசார், அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஷ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோவிந்தராஜன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சஞ்சய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ரூபேசுக்கு 3 வாரம் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்ட சத்யா சொரூபனுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.