புதுடெல்லி: மகாராஷ்டிரா நிலச்சரிவு பலி 27 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றுடன் 3வது நாளாக 86 பேர் ேதடும் பணி தீவிரமாக நடக்கிறது. டெல்லி யமுனை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக பருவ மழை கொட்டி வருகிறது. இதனால், நகரங்களின் சாலை முழுவதும் பல இடங்களில் வெள்ளக்காடாக உள்ளது. வீடுகள் மற்றும் கடைகள் பெருமளவில் கனமழை மற்றும் மேகவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளன. குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை வரை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், ஆறுகளில் அபாய அளவை கடந்து நீர்மட்டம் செல்கிறது.
மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை 16 பேர் பலியாகினர். இன்று மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இன்னும், 86 பேர் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒன்பது ஆண்கள், பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளநீர் மீண்டும் இன்று காலை 205.81 மீட்டர் அளவுக்கு உயர்ந்து அபாய அளவை கடந்து உள்ளது. இமாசல பிரதேசத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால், 3 பேர் காணாமல் போயுள்ளனர். வாகனங்கள் பல நீரில் அடித்து செல்லப்பட்டன. மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளும் கனமழையால் தொடர்ந்து வருகின்றன. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் கனமழையால் 50 கட்டிடங்கள் பாதிப்படைந்ததுடன், 50 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 40 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.