ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோட்டா நகரில் மகா சிவராத்திரி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 17 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற இடத்தில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடியிருந்தனர். அப்போது காளிபஸ்தி என்ற இடத்தில் கலசத்தில் தண்ணீர் எடுத்த போது மின்சாரம் தாக்கியதில் 17 குழந்தைகள் காயம் அடைந்தனர். சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய் உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
காயம் அடைந்த 17 பேரில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில அமைச்சர் ஹீராலால் நகர் தெரிவித்துள்ளார்.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயமும், மற்றொரு குழந்தைக்கு 50 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளுக்கு 50 சதவீதத்துக்கும் கீழ் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜஸ்தான் அமைச்சர் ஹீராலாலும் குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.