Saturday, June 1, 2024
Home » மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் விசிகவுக்கு பானை சின்னம் இல்லை: தேர்தல் ஆணையம் தகவல்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் விசிகவுக்கு பானை சின்னம் இல்லை: தேர்தல் ஆணையம் தகவல்

by Mahaprabhu

சென்னை, மார்ச் 28: மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவதையும் நிராகரித்துள்ளதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக வைகோ தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, பம்பரம் சின்னம் ஒதுக்க மறுத்து தேர்தல் ஆணையம் அளித்த பதிலை படித்துக்காட்டிய மதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், கடந்த 2010ல் மதிமுகவின் அங்கீகாரம் ரத்தான நிலையிலும், 2019ம் ஆண்டு வரை பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது ஒதுக்கீட்டு சின்னமாக பம்பரம் இல்லாத நிலையில், அதை பொது சின்னமாக அறிவித்து தங்களுக்கு ஒதுக்க எந்த தடையும் இல்லை. இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையின்படி வேறொரு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடவும் தயாராக உள்ளோம் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒதுக்கீட்டு சின்னத்தில் இருந்து நீக்கப்பட்ட சின்னத்தை பொது சின்னமாக கருத முடியுமா, அந்த சின்னத்தை மதிமுகவுக்கு தேர்தல் அதிகாரி ஒதுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், ஒரே மாநிலத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ஏற்கனவே வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு சின்னத்தை வழங்க முடியும். பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் பொதுச்சின்னமாக அறிவித்து இன்னும் அறிவிப்பாணை வெளியிடாத நிலையில் அதை எவருக்கும் ஒதுக்க முடியாது. விதிகளை பூர்த்தி செய்யாததால் விதிகளில் இல்லாத கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னத்தை ஒதுக்கும்படி மதிமுக கோரலாம். பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக அறிவிக்கப்படாததால் அதை பொது சின்னமாக கருத முடியாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பான நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யாத நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (நேற்று) கடைசி நாள் என்பதால், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வைகோவின் மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள்: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், சட்டசபை தேர்தலின் போதும் விசிக கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது.இதனை காரணமாக காட்டி குறைந்தபட்சம் இரண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. இரண்டு தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டால் ஏற்கனவே போட்டியிட்ட சின்னத்தை கொடுக்க வேண்டும் என விசிக தரப்பில் தற்போது தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனிடம் முறையிட்டும் பதில் கிடைக்காத நிலையில் வி.சி.க தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றே(நேற்று) தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த தேர்தல்களில் மாநிலத்தில் விசிக ஒரு சதவீதம் அளவிற்கு கூட ஓட்டு வாங்கவில்லை. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியின் நிதி ஆண்டு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை எனவே வி.சி.கவுக்கு பானை சின்னம் தர முடியாது’’ என்று தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

eleven − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi