மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில், கும்பாபிஷேகம் பணி துவங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஏரிகாத்த ராமர் கோயில் என அழைக்கப்படும் கோதண்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டுமகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பிறகு 17 ஆண்டுகள் கடந்த தற்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால், அதன் தொடக்க விழாவாக கருதப்படும் பாலாலயம் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன், ஆய்வாளர் பாஸ்கர், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த பிரபலமான கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, மூலவர் சன்னதியான ராமர் சன்னதி, தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், தேசிகர், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் ஆகிய சன்னதிகளும், கோயிலின் பிரதான ராஜகோபுரம் மற்றும் கோயில் எதிரே அமைந்துள்ள ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை புனரமைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியது. அப்போது கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் கூறுகையில், ”இந்த கோயில் சீரமைப்பு பணிகள் எதிர்வரும் 9 மாதங்கள் வரை நீடிக்கும் எனவும், அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்பு அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில், தேதி குறிப்பிடப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறும்” என்றார். கடந்த 2006ம் ஆண்டுமகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 17 ஆண்டுகள் கடந்து தற்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.