பெரம்பூர்: வீட்டில் இருந்த பினாயிலை குடித்துவிட்டு 2வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி உயிருக்கு போராடி வருகின்றார். ‘’ஜோடியாக உள்ள படத்தை வெளியிடுவேன்’ என்று காதலன் மிரட்டியதால் இந்த முடிவை எடுத்துள்ளார். சென்னை பெரம்பூர் பாரதி சாலையை சேர்ந்தவர் 18 வயது பெண். இவரது தந்தை சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதால் தாயுடன் வசித்து வருகின்றார் அங்குள்ள கலைக் கல்லூரியில் முதல் வருடம் படித்து வருகின்றார்.
இந்தநிலையில், கொளத்தூர் ஜிகேஎம்.காலனி பகுதியை சேர்ந்த விக்கி என்ற வாலிபரை சிலமாதங்களாக மாணவி காதலித்துவந்ததாக கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாணவி, விக்கியுடன் பேசுவதையும் சந்திப்பதையும் அடியோடு நிறுத்திவிட்டதாக தெரிகிறது. ஆனால் இதன்பிறகு விக்கி, அடிக்கடி மாணவிக்கு போன்செய்து ‘’தன்னிடம் பேசவில்லை என்றால், ‘’நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோக்களை உன் குடும்பத்தாரிடம் காட்டி விடுவேன்’’ என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதுபோல் நேற்றிரவு 10 மணி அளவில் செல்போனில்பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்துவிட்டு 2வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதில் தலை, முகத்தில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்த மாணவியை மீட்டு உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தரப்பினர் கொடுத்துள்ள புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்து விக்கியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.