வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவர், நேற்று வேலூர் மண்டி தெரு, பூ மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பூக்கடையில் இருந்த தாமரை பூ, துளசி இலைகளை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு,‘தாமரையை தின்னாச்சு, இரட்டை இலையை மென்னாச்சு, பலாப்பழம் ஜெயிச்சாச்சு,’என்று கூறினார்.இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் தனியாகத்தான் வேட்பு மனு தாக்கல் செய்தேன்.
அதனால் தற்போது தனியாக பிரசாரம் செய்கிறேன். நான் மக்களுடன் கூட்டணி. எனக்கு மக்கள் இருக்கிறார்கள். நான் மக்களுடன் இணைந்து வேலூரில் போட்டியிடுகிறேன். என்னை மக்கள் எம்.பி.யாக ஆக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து விட்டது. பிரதமர் வாயை திறக்க முன்வரவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசங்களில் சென்று மாநாடு நடத்த வேண்டும். அங்கெல்லாம் செல்லாமல் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதால் பிரதமர் மோடி இங்கு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.