சேலம்:. அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 1924 பார்டர் (மாநில எல்லை ஆர்டிஓ) செக்போஸ்ட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பார்டர் செக்போஸ்ட்டுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் ஓசூர் அத்திப்பள்ளி பார்டர் செக்போஸ்ட்டில் இருந்து ஒரு லாரி மத்தியபிரதேசத்திற்கு செல்ல வழியில் ரூ.3 ஆயிரம் வரை கொடுக்க வேண்டி உள்ளது. பார்டர் செக் போஸ்ட்டில் 80 சதவீதம் லாரிகளை நிறுத்தி பணம் பெறப்படுகிறது.
இந்தியாவில் பாஜ ஆளும் 14 மாநிலங்களில் பார்டர் செக் போஸ்ட்டுகள் இல்லை. மற்ற மாநிலங்களில் அகற்றாமல் உள்ளனர். தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் 114 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி உள்ளன. ஒரு ஆண்டுக்கான சுங்கச்சாவடி கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தும் திட்டத்தை முன்வைத்து வருகிறோம். ஆனால் இதனை ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி மாதம் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.